பள்ளியில் நெருக்கடி - பிளஸ் 2 மாணவன் தற்கொலை
கடந்த சில நாட்களாக மாணவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை;
திருச்சி காஜாமலை காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் டி.வி.எஸ்.டோல்கேட் அருகே டிபன் கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் துரைசிங்கம் (வயது 17). இவர் சத்திரம் பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்துள் ளார். இதனை தொடர்ந்து மாணவர் துரைசிங்கத்தை பள்ளிக்கு வரும் படி அழைத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த துரைசிங்கம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ராமச்சந்திரன், தனது மகன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மாணவர் துரைசிங்கத்துக்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து பல்வேறு நெருக்கடி கொடுத்ததால் தான் அவர் மனஉளைச் சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் பள்ளி தரப்பில் இருந்து 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.