பரமத்தி வேலூரில் பஸ்சில் பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை, ரூ.17 ஆயிரம் திருட்டு.

பரமத்தி வேலூரில் பஸ்சில் பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை, ரூ.17 ஆயிரம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை.;

Update: 2025-09-18 13:53 GMT
பரமத்தி வேலூர்,செப்.18: பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் அருகே கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (60). இவரது மனைவி துளசிமணி (52). இவர் திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ளதால், கண் அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவைப்பட்டது. இதைத்தொடர்ந்து கண் அறுவை சிகிச்சைக்காக தனது 3 பவுன் தங்க நகையை அடமானம் வைப்பதற்காக அவர் வங்கி கணக்கு வைத்துள்ள பரமத்தி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு செல்வதற்காக தங்க நகை மற்றும் ரூ.17 ஆயிரம் பணம் ஆகியவற்றை தனது பேக்கில் வைத்து கொண்டு கந்தம்பாளையத்திலிருந்து பரமத்திவேலூருக்கு அரசு டவுன் பஸ்சில் ஏறியுள்ளார். பின்னர் பரமத்தி வேலூர் பஸ் நிலையத்தில் இறங்கி பரமத்தி வேலூர் 4 ரோட்டில் உள்ள வங்கிக்கு செல்வதற்காக வெங்கரை செல்லும் மினி பஸ்சில் ஏறி சென்றுள்ளார். அங்குள்ள 4 ரோட்டில் இறங்கி தேசிய பழைய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று தனது பேக்கை திறந்து பார்த்தபோது பேக்கில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் 17 ஆயிரம் ரூபாய் பணத்தை காணவில்லை. அதிர்ச்சியடைந்த துளசிமணி இது குறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பரமத்திவேலுார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஸ்சில் பயணம் செய்த பெண் பயணியிடம், நகை, பணம் திருட்டு போன சம்பவம் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News