பொதுமக்களின் வீடுகளுக்கு சீல் வைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிரம் - எதிர்ப்பு தெரிவித்து 4 பேர் உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் தற்கொலைக்கு முயன்றதால் கரூரில் பரபரப்பு..

பொதுமக்களின் வீடுகளுக்கு சீல் வைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிரம் - எதிர்ப்பு தெரிவித்து 4 பேர் உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் தற்கொலைக்கு முயன்றதால் கரூரில் பரபரப்பு..;

Update: 2025-11-20 09:01 GMT
பொதுமக்களின் வீடுகளுக்கு சீல் வைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிரம் - எதிர்ப்பு தெரிவித்து 4 பேர் உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் தற்கொலைக்கு முயன்றதால் கரூரில் பரபரப்பு.. கரூரை அடுத்த வெண்ணைமலை அருள்மிகு பாலசுப்பிரமணியம் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இனாம் நிலங்கள் கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கின்றன. கடந்த நூற்றாண்டில் கோவில்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இனாம் நிலங்கள் கோவில் சார்பாக வழங்கப்பட்டது. அதில் தற்போது அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலங்கள் பலரது கைக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறையாக பரிவர்த்தனை செய்யப்பட்டு கை மாறி உள்ளது இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் கோவில் இனாம் நிலங்களில் உள்ள வர்த்தக கடைகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சீல் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு அறநிலையத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு சீல் வைக்க இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி பொறுப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தியதால் அதிகாரிகள் சீல் வைக்காமல் சென்றனர். இந்நிலையில் இன்று காலை 7.45 மணியளவில் சின்ன வடுகபட்டி பகுதியில் கண்ணம்மாள் என்பவர் வாடகை வீடுகளுக்கு சீல் வைக்க அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணிகாந்தன் தலைமையில் அதிகாரிகள் சீல் வைக்க வந்தனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணம்மாள் குடும்பத்தினர் 4 பேர் உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திமுக ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் அங்கு திரண்டு அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தொடர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500 பொதுமக்களுடன் சேர்ந்து எம்.பி ஜோதிமணி,முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து கண்ணம்மாள் என்பவர் வாடகைக்கு விட்டிருக்கும் 23 வீடுகளுக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் பொது மக்களில் ஒரு பகுதியினர் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் பொதுமக்களின் போராட்டத்தால் போக்குவரத்து முடங்கியது. வாகனங்கள் அரை மணி நேரத்துக்கும் மேலாக சுமார் 1 கி.மீ வரை தூரம் வரை நின்றன. தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கய்யா உத்தரவின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அனைவரும் 4 திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Similar News