பலத்த காற்றால் கூரையில் தென்னை மரம் விழுந்து சேதம் : பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி
நிதியுதவி;
பலத்த காற்றால் கூரை வீட்டில் தென்னை மரம் விழுந்து, வீடு சேதமடைந்த குடும்பத்தினருக்கு எம்எல்ஏ ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, செங்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி, இவரது கணவர் சோலை. இருவரும் கூலித் தொழிலாளிகள். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை, பேராவூரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில், ஆங்காங்கே மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போது, செங்கொல்லை பகுதியில் குடியிருந்த இந்திராணியின் கூரை வீட்டின் மீது, அருகில் இருந்த தென்னை மரம் சரிந்து விழுந்தது. இதில், வீட்டில் உள்ளே இருந்த இந்திராணி மற்றும் அவரது கணவர் சோலை இருவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தென்னை மரம் சரிந்து விழுந்ததால், கூரை வீடு சேதமடைந்தது. தகவல் அறிந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மரத்தை வெட்டி அகற்றினர். இதுகுறித்து தகவல் அறிந்த, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் திங்கள்கிழமை காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி, ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். மேலும், பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் சுப்பிரமணியனை தொடர்பு கொண்டு, அரசு சார்பில் நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தினார்.