வாக்கு திருட்டைக் கண்டித்து செப். 6, 13-இல் தொடர் முழக்கப் போராட்டம்

போராட்டம்;

Update: 2025-08-31 06:12 GMT
வாக்கு திருட்டை கண்டித்து திருச்சியில் செப்டம்பர் 6 ஆம் தேதியும், தஞ்சாவூரில் 13 ஆம் தேதியும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவது என வாக்குரிமை காப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இந்த இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் இயக்க ஒருங்கிணைப்பாளரும், மக்கள் அதிகாரம் மூத்த நிர்வாகியுமான காளியப்பன் தெரிவித்தது: இந்திய தேர்தல் ஆணையம் மக்களின் நம்பிக்கையை இழந்த ஆணையாக மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியுடன் இணைந்து மிகப் பெரிய தில்லுமுல்லுவை நடத்துகிற நிறுவனமாக மாறியுள்ளது என்பதை ராகுல் காந்தி அமல்படுத்தியுள்ளார். இதற்கு முன்பு சில அமைப்புகள், மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் எவ்வளவு முறைகேடுகள் நடந்துள்ளது என்பதை ஆய்வு செய்து, ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, பிகாரில் சிறப்பு திருத்த முறை என்கிற பெயரில் மிகப் பெரிய அளவில் பிகார் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. பிகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டு, அவர்களது குடியுரிமையை நிரூபிப்பதற்கான சான்றுகளைக் கொண்டு வந்தால்தான் வாக்காளர்களாக சேர்ப்போம் என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. ஆனால், மக்கள் கையில் இருக்கும் ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்பட 11 ஆவணங்களை ஆணையம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இதன் மூலம் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கக்கூடும் எனக் கருதப்படுகிற மக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நிரந்தரமாக நீக்குவது என்கிற ஜனநாயக விரோதமான நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் செய்கிறது. இது வெறும் வாக்காளர் பிரச்னை மட்டுமல்லாமல், குடியுரிமையை இல்லாததாக்கும் வேலையை தேர்தல் ஆணையமே செய்து வரும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, தேர்தல் ஆணையத்தைக் கண்டித்தும், குறுக்கு வழியில் அதிகாரத்தைப் பெற்ற பிரதமர் மோடி பதவி விலக கோரியும் திருச்சியில் செப்டம்பர் 6 ஆம் தேதியும், தஞ்சாவூரில் 13 ஆம் தேதியும் முழு நாள் தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, அம்மாபேட்டை, பாபநாசம், வல்லம், செங்கிப்பட்டி, பூதலூர் ஆகிய சிறு நகரங்களில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது என்றார் காளியப்பன். அப்போது, தாளாண்மை உழவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் கோ. திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலர் கோ. சக்திவேல், சிபிஐஎம்எல் மக்கள் விடுதலை மாநில நிர்வாகி இரா. அருணாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News