திருவண்ணாமலையில் 63 நாயன்மார்களுக்கு அறுபத்து மூவர் மடத்தில் சிறப்பான வரவேற்பு
திருவண்ணாமலையில் தீபத்திருவிழா 6ம் நாள் திருவிழாவில் 63 நாயன்மார்களுக்கு அறுபத்து மூவர் மடத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.;
ஆரணி, திருவண்ணாமலையில் தீபத்திருவிழா 6ம் நாள் திருவிழாவில் 63 நாயன்மார்களுக்கு அறுபத்து மூவர் மடத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை சின்ன கடைத் தெருவில் 101 ஆண்டுகள் பழமை வாய்ந்த அறுபத்து மூவர் மடம் உள்ளது. இங்கு கார்த்திகை தீபம் 6-ஆம்நாள் திருவிழாவில் 63 நாயன்மார்களும் இந்த மடத்திற்கு வந்து இங்குள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் தரிசித்து செல்வது வழக்கமாகும். அதன்படி சனிக்கிழமை நடைபெற்ற கார்த்திகை தீப 6-வது நாள் விழாவில் 63 நாயன்மார்களை தோளில் சுமந்து பள்ளி மாணவர்கள் மாடவிதியை சுற்றி எடுத்து வந்தனர். வழியில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 63 நாயன்மார்களும் அறுபத்து மூவர் மடத்திற்கு சென்று ஸ்ரீ காசி விஸ்வநாதரை தரிசித்தனர். மடத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் எம்.பாலசுப்பிரமணி, எம்.வச்சிரவேல் ஆகியோர் சிறப்பு பூஜைகளை நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.