சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை: 7 பேர் பிடிபட்டனர்!

தூத்துக்குடியில் 2-வது நாளாக நடந்த  ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகையில் வ.உ.சி. துறைமுகத்தை தாக்க முயன்ற 5 பேர் உள்பட 7 பேர் பிடிபட்டனர்.

Update: 2024-09-06 06:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல்வழியாக நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து கடலோர பாதுகாப்புக்கு முக்கியதுவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடலோர பாதுகாப்பு போலீஸ் குழுமம் உருவாக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அவ்வபோது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் காலை முதல் ‘சாகர் கவாச்’ என்னும் பயங்கரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. இதில் கடற்படை, கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு போலீசார், கியூ பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்புபடை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் ஆகியோர் தலைமையில் போலீசார் படகில் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். நேற்று முன்தினம் மாலையில் பனிமயமாதா ஆலயம் அருகே பதுங்கி இருந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். நேற்று 2-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. அப்போது தூத்துக்குடியில் இருந்து 3 கடல் மைல் தொலைவில் வந்த ஒரு நாட்டுப்படகில் வந்த 2 பேரை போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் போலி பயங்கரவாதிகள் என்பதும், தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தாக்க வந்ததும் தெரியவந்தது. உடனடியாக 2 பேரையும் கைது செய்தனர். இதே போன்று 5 கடல்மைல் தொலைவில் வந்த மற்றொரு படகை சோதனை செய்தனர். அந்த படகில் இருந்த 5 பேரும், வ.உ.சி. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் கப்பலை தாக்குவதற்கு திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்களையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த ஒத்திகை மாலை வரை நடந்தது. இதில் ஊடுருவ முயன்ற அனைவரும் பிடிபட்டதால் ஒத்திகை நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது.

Similar News