உளுந்துார்பேட்டை அடுத்த உ.நெமிலி கிராமத்தைச் சார்ந்தவர் யுவராஜ், 24; கூலித் தொழிலாளி. இவர் கேரளாவில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா வீட்டில் தனியாக வசிக்கிறார்.சந்தியா நேற்று அவரது உறவினர் வீட்டிற்கு சென்று மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் உள்ளே சென்றபோது, 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்து 9 சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடு போயிருந்தது. இது குறித்து சந்தியா உளுந்துார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உளுந்துார்பேட்டையில் பட்டப் பகலில் வீடு புகுந்து நகை பணம் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.