நாய் கடித்து 16 பேர் காயம்
பள்ளூர் கிராமத்தில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என, கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.;
நாய் கடித்து காயம்
காஞ்சிபுரம் அடுத்த பள்ளூர் கிராமத்தில், வராஹி கோவில் உள்ளது. இங்கு பஞ்சமி, அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி, பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் வருகின்றனர். பள்ளூர் ரயில் நிலையம் மற்றும் விருத சீர நதி ஆற்றங்கரை ஓரமாக உள்ள குடியிருப்புகளில், நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளன.
குறிப்பாக, பள்ளூர் பேருந்து நிறுத்தம் மற்றும் திருமால்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வராஹி கோவிலுக்குச் செல்லும் பெண் பக்தர்கள் மற்றும் மேய்ச்சலுக்குச் செல்லும் மாடுகளை, நாய்கள் துரத்திக் கடிக்கின்றன. இந்த வகையில், பள்ளூர் கிராமத்தில் நேற்று முன்தினம் வரையில், 16 பேரை நாய்கள் கடித்துள்ளன. எனவே, பள்ளூர் கிராமத்தில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என, கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'நாய்கள் தொல்லை குறித்து, சம்பந்தப்பட்ட புளூ கிராசிடம் புகார் அளித்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.