17 கிராம ஊராட்சிகளில் சமூகதணிக்கை சிறப்பு கிராம சபைகூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 17 கிராம ஊராட்சிகளில் சமூகதணிக்கை சிறப்பு கிராம சபைகூட்டம்;
தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் 17 கிராம ஊராட்சிகளில் நடந்தது. 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 17 கிராம ஊராட்சிகளில் ஜுன் - 30ம் தேதி முதல் ஜூலை 4ம்தேதி வரை வட்டார வள பயிற்றுநர்கள் மற்றும் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கையினை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. கிராமசபை கூட்ட நடவடிக்கைகளை நிர்ணய் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. புதூர் ஊராட்சி ஒன்றியம் மெட்டில்பட்டி கிராம ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் அன்னலட்சுமி தலைமை வகித்தார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சரவண முருகன் சமூக தணிக்கை வட்டார வள பயிற்றுநர் முத்து முருகன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். இதில் தூத்துக்குடி மாவட்ட சமூக தணிக்கை மாவட்ட வள அலுவலர் மோகன் கலந்து கொண்டு சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக பொதுமக்களுடன் கலந்துரையாடல் செய்தார்.இதில் சமூகத்தணிக்கை அறிக்கை மீது கிராம சபையில் விவாதிக்கபட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதில் கிராம வள பயிற்றுநர்கள் சுமதி,சரஸ்வதி, மாரீஸ்வரி, பணித்தள பொறுப்பாளர் சத்யா, மெட்டில்பட்டி முன்னாள் ஊராட்சி செயலர் வேல்முருகன், உள்பட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் மல்லிகா நன்றி கூறினார். இதே போல் புதூர் ஒன்றியம் மாவில்பட்டி உள்பட மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 17 கிராம ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.