மோட்டார்சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது!

குடியாத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது - ஐந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்.

Update: 2024-03-31 17:54 GMT

காவல்துறை விசாரணை


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை பகுதி, உழவர்சந்தை பகுதி, திலகர் தெரு, ராசி அருணாசலம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மோட்டார்சைக்கிள்கள் திருட்டுப் போயின. மோட்டார்சைக்கிள் திருடர்களை பிடிக்க டி.எஸ்பி ரவிச்சந்திரன் மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள் திருடர்களை தேடி வந்தனர். நேற்று மாலை குடியாத்தத்தை அடுத்த விநாயகபுரம் பகுதியில் தனிப்படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கொல்லமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுஜித் (வயது 21), கார்த்திக் (19) என்று கூறினர். அவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் குடியாத்தத்தில் திருடியதாகக் கூறினர். 2 பேரும் கூட்டாக சேர்ந்து குடியாத்தம் பகுதியில் மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்ததாகக் கூறினர். 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மற்றும் சுஜித் வீட்டின் அருகே மறைத்து வைத்திருந்த 4 மோட்டார்சைக்கிள்கள் உள்பட மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பிலான 5 மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News