கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 76வது குடியரசு தினவிழா கோலாகலமாக நேற்று நடந்தது. காலை 8.05 மணியளவில் எஸ்.பி., ரஜத்சதுர்வேதி முன்னிலையில், கலெக்டர் பிரசாந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கலெக்டர், எஸ்.பி., இருவரும் திறந்த ஜீப்பில் நின்றவாறு சென்று, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், மாவட்டத்தில் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்ததற்காக 28 போலீசாருக்கு முதலமைச்சர் பதக்கத்துடன் கூடிய சான்றிதழை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். மேலும், அணிவகுப்பில் பங்கேற்ற ஆயுதப்படை, தீயணைப்பு, வனத்துறை, ஊர்க்காவல்படை, என்.சி.சி., ஜே.ஆர்.சி., என்.எஸ்.எஸ்., படை தளபதிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சிறப்பாக பணிபுரிந்த காவல், தீயணைப்பு மீட்பு பணிகள், வருவாய், நில அளவை, ஊரக வளர்ச்சி, பத்திர பதிவு, மின்சாரம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள், சுகாதார பணிகள் இணை இயக்குநர், துணை இயக்குநர், மாற்றுத்திறனாளி, வேளாண்மை, சித்த மருத்துவம், தாட்கோ, கருவூலம் உட்பட 45 அரசு துறைகளை சேர்ந்த 377 அரசு அலுவலர்கள், ஊழியர்களின் பணியை பாராட்டி கலெக்டர் பிரசாந்த் நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.