49 பயனாளிகளுக்கு ரூ.9.86 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவி
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 426 மனுக்கள் பெறப்பட்டது.;
பெரம்பலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் 49 பயனாளிகளுக்கு ரூ.9.86 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (14.07.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே மாவட்ட ஆட்சித்தலைவர் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். பின்னர் வருவாய் துறை சார்பில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.67,500 மதிப்பிலான இயற்கை மரண உதவித்தொகையும், 2 பயனாளிகளுக்கு ரூ.20,000 மதிப்பிலான திருமண உதவித் தொகையும், 8 பயனாளிகளுக்கு ரூ.2,40,000 மதிப்பீட்டில் வீட்டுமனைப் பட்டாக்களையும், 5 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையையும், 1 பயனாளிக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயற்கை கால் வழங்கும் திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.6,44,000 மதிப்பீட்டில் செயற்கை கால்களையும், 1 பயனாளிகளுக்கு வரையறுக்கப்பட்ட பாதுகாவலர் நியமன சான்றிதழையும், 15 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையையும் என மொத்தம் 49 பயனாளிகளுக்கு ரூ.9,86,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர் மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடுமாறும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 426 மனுக்கள் பெறப்பட்டது. முன்னதாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2024-2025-ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு (100/100) மதிப்பெண்கள் பெற்ற களரம்பட்டி, அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் B தீபிகா, M அனிஷா, மற்றும் பொம்மனப்பாடி, அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியின் மாணவி S செல்சியா ஆகிய மாணவச் செல்வங்களை ஊக்குவித்தல் மற்றும் கௌரவிக்கும் விதமாக ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களால் வழங்கப்பட்டுள்ள பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்களுடன் கூடிய கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவிகளுக்கு வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சொர்ணராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், ஆதிதிராவிடர் நல அலுவலர் வாசுதேவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுந்தரராமன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.