ரூ.55 ஆயிரத்திற்கு காங்கயம் பசுமாடு விற்பனை
காங்கேயம் பழைய கோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.55 ஆயிரத்திற்கு காங்கயம் பசுமாடு விற்பனை;
நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை மாட்டு தாவணியில் காங்கேயம் இன மாட்டு சந்தை வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் காங்கேயம் இன மயிலை, செவலை பசு மாடுகள், பூச்சி காளைகள், இளங்கன்றுகள் என மொத்தம் 13 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த சந்தையில் அதிகபட்சமாக 9 மாத சினையுடன் காங்கேயம் இன செவலை பசுமாடு ரூ.55 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒரே நாளில் 6 காங்கேயம் இன மாடுகள் மொத்தம் ரூ.2½ லட் சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் காங்கேயம் இன பசுமாடுகள் வளர்க்கும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். வெள்ளகோவில் அருகே கண்ணபுரம் மாட்டு சந்தை நேற்று முதல் தொடங்கி உள்ளதால் பழையகோட்டை மாட்டுத்தாவணிக்கு காங்கேயம் இன கால்நடைகள் வரத்து குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.