சாலையில் சென்ற காரில் தீ விபத்து

சாத்தூர் அருகே சாலையில் சென்ற காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சாதுர்யமாக காரில் வந்தவர்கள் இறங்கியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

Update: 2024-02-04 07:11 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஓ மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் சங்கரேஸ்வரன் ( 32 ) . சொந்தமாக டாடா சுமோ கார் வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த நிலையில் இன்று சங்கரேஸ்வரனின் மருமகன் (சகோதரி மகன்) வைரம் (24) என்பவர் தனது நண்பர்களுடன் வைப்பாற்றில் குளிப்பதற்காக சங்கரேஸ்வரனின் காரில் சென்றுள்ளார். குளித்து முடித்துவிட்டு போக்குவரத்து நகர் பகுதி வழியாக திரும்பி வந்தபோது திடீரென கார் இன்ஜினில் இருந்து புகை வந்துள்ளது.

உடனடியாக காரை நிறுத்திவிட்டு நண்பர்களுடன் இறங்கி வந்து பார்ப்பதற்குள் கார் மளமளவென தீ பற்றி எரிய ஆரம்பித்தது. உடனடியாக வைரம் சாத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவறிந்தவுடன் விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் தீப்பற்றி எரிந்த சுமார் 1/2 மணி நேரம் போராடி அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும்  எரிந்து கருகியது. காரில் தீப்பிடித்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரில் புகை வரும் போது சுதாரித்துக் கொண்டு நண்பர்களுடன் கீழே இறங்கியதால் வைரம் மற்றும் அவரது நண்பர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.குளிக்கச் சென்ற போது திடீரென காரில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News