கிணற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி
கோவில்பட்டி அருகே கிணற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி இறந்தார். தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி அவரது உடலை மீட்டனர்.
Update: 2024-02-14 12:24 GMT
கோவில்பட்டி அருகே கிணற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி இறந்தார். தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி அவரது உடலை மீட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்த சங்கரபாண்டி மகன் வெள்ளத்துரை (35). கட்டிட தொழிலாளி. இவருக்கு மரியா (30) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினமும் வேலை முடிந்து வரும் அவர், வேலாயுதபுரம் நெடுங்குளம் கண்மாய் பகுதிக்கு சென்று மது குடிப்பாராம். பின்னர் அருகேயுள்ள கிணற்றில் இறங்கி குளித்து விட்டு வீட்டுக்கு வருவராராம். இந்நிலையில் கேரளாவில் இருந்து வந்திருந்த உறவினர் 2 பேருடன் நேற்று முன்தினம் மதுபாட்டில்களுடன் நெடுங்குளம் கண்மாய் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு 3 பேரும் மது குடித்து விட்டு, கிணற்றில் இறங்கி குளித்துள்ளனர். இதில், உறவினர் இருவர் மட்டும் கிணற்றிலிருந்து வெளியே வந்துள்ளனர். வெள்ளத்துரை கிணற்றில் இருந்து வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கிணற்றில் இறங்கி சிறிது நேரம் தேடிப்பார்த்துள்ளனர். இதில் வெள்ளத்துரையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த 2பேரும் ஓடிச்சென்று, கிராமத்திற்குள் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்த வெள்ளத்துரை கிணற்றில் இருந்து வெளியே வரவில்லை என தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து குடும்பத்தினர் கொடுத்த தகவலின் பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீசாரும், தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான வீரர்களும் கிணற்றுக்குள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர், வெள்ளத்துரையின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவரது உடலை கிழக்கு போலீசார் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.