மகுடஞ்சாவடி சேர்ந்த பெண் தீக்குளிக்க முயற்சி
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு.
Update: 2024-02-06 06:00 GMT
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே நடுவனேரியை சேர்ந்த மல்லிகா (55) என்பவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மல்லிகாவை தடுத்து விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரிடம் கூறும்போது, ‘நடுவனேரி பகுதியில் சொந்தமாக உள்ள நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறேன். நிலம் தொடர்பாக எனது தந்தை மற்றும் பெரியப்பா குடும்பத்தினருக்கு இடையே தகராறு இருந்து வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் 24-ந் தேதி பெரியப்பாவின் மகன், எனது நிலத்திற்கு வந்து 4 பனை மரத்தை வெட்டி சாய்த்து நிலம் எங்களுக்கு சொந்தம் எனக்கூறி மிரட்டினார். இதை தட்டிகேட்ட எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தற்கொலைக்கு முயன்றேன். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். இதையடுத்து மல்லிகாவை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.