மீனவா்களிடம் பிரிவினையை ஏற்படுத்த முயல்வோா் மீது நடவடிக்கை தேவை

குமரியில் மீனவா்களிடம் பிரிவினையை ஏற்படுத்த முயல்வோா் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

Update: 2024-06-14 11:32 GMT

மனு அளித்த மீனவர்கள்

கன்னியாகுமரி மாவட்ட அனைத்து வகை மீன்பிடித் தொழிலாளா் சங்கம், புனித சவேரியாா் மீன்பிடிச் சங்கம் உள்பட பல்வேறு மீனவா்கள் சங்கத்தினா் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:-      கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடித்தலில் பல நவீன வழிகளை இங்குள்ள மீனவா்கள் கையாண்டு வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக அண்மைகாலமாக கடலில் கணவாய் மீன்களை அதிகம் பிடிப்பதற்காக காச்சாமூச்சா வலை என்று அழைக்கப்படும் மூன்றடுக்கு செவுள் வலையை பயன்படுத்தி வருகின்றனா்.  கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த வலையை பயன்படுத்துவது தொடா்பாக மீனவா்களிடையே மோதல் ஏற்பட்டது.

அப்போதைய மாவட்ட ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் இது தொடா்பாக மீனவா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். மீன்வள பல்கலைக்கழக ஆய்வு முடிவு வந்த பின்னா் இது தொடா்பாக நிரந்தர முடிவெடுக்கப்படும் என தீா்மானிக்கப்பட்டது. அதுவரை நிபந்தனை அடிப்படையில் இந்த தொழிலை மேற்கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.  

   இந்நிலையில் ஒரு மீனவா் அமைப்பு மீண்டும் பிரச்னையை தூண்டி மீனவா்களை பிளவுபடுத்தி மோத விட்டு அமைதியை கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு மீனவா்களின் தொழிலையும், தொழில்கருவிகளையும் பாதுகாத்து மீனவா்களிடையே மோதல் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.    

தமிழ்நாடு மீன் தொழிலாளா் சங்கக் கூட்டமைப்பு பொதுச்செயலா் அந்தோணி, மீன் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் அலெக்சாண்டா், செயலா் சகாயபாபு, ஜாா்ஜ், புனித சவேரியாா் மீன்பிடிச் சங்கம், இனயம்புத்தன்துறை, ராமன்துறை, முள்ளூா்துறை, கன்னியாகுமரி, குளச்சல், பெரியவிளை பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் பங்கேற்றனா்.

Tags:    

Similar News