மருத்துவமனையில் மனைவியுடன் இருந்த முதியவர் நெஞ்சுவலியால் பலி

சேலம் மருத்துவமனையில் மனைவியை கவனித்து வந்த கணவன் நெஞ்சு வலி காரணமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-01-06 09:40 GMT

கணவன் சாவு

சேலம் மாவட்டம் தலைவாசல் கோவிந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிமுத்து (வயது 55). விவசாயி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி (50). இந்த நிலையில் ஜெயலட்சுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு கடும் அவதிப்பட்டு வந்தார். மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் குணமாகவில்லை. இதனால் தனது மனைவியை அழைத்துக் கொண்டு பழனிமுத்து சேலம் அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தார். அங்கு தொடர்ந்து ஜெயலட்சுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பழனிமுத்துவும் உடனிருந்து தனது மனைவியை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் பழனிமுத்துக்கு  திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் வலியால் அலறி துடித்த அவரை வார்டுக்குள் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் 5.30 மணி அளவில் பழனிமுத்து சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து ஜெயலட்சுமி கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News