நீலகிரியில் மீண்டும் களம் காணும் ஆ.ராசா
நீலகிரி தொகுதியில் மீண்டும் தி.மு.க., சார்பில் ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் எஸ்.கே. ஆண்டிமுத்து, கிருஷ்ணம்மாள் தம்பதியருக்கு மகனாக ஆ.இராசா கடந்த 1963ம் ஆண்டு மே 23ம் தேதி பிறந்தார். தொடக்கக் கல்வியை வேலூரிலுள்ள அரசு ஆதிதிராவிட நல ஆரம்பபள்ளியில் 1973ம் ஆண்டு வரையும், உயர்நிலை பள்ளிக் கல்வியை பாடாலூரிலுள்ள அரசு பள்ளியிலும் பயின்றார். அவரது பட்டப்படிப்பை (பி.எஸ்ஸி., கணிதம்) முசிறி அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியிலும், சட்டப்படிப்பு (பி.எல்.,) மதுரை சட்டக்கல்லூரியிலும், முதுநிலை சட்டப் படிப்பை (எம்.எல்.,) திருச்சியிலுள்ள அரசு சட்டக் கல்லூரியிலும் பயின்றார்.
ஒரு வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். ஆ.இராசா பரமேஸ்வரி என்பவரை கடந்த 1996ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மயூரி ராஜா என்ற மகள் உள்ளார்.அவர் தற்போது லண்டனில் சட்டப்படிப்பு படித்து வருகிறார். ஆ.ராசா பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார்.
பின்னர் 1999ல் நடந்த 13வது நாடாளுமன்ற தேர்தலிலும் பெரம்பலூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டார். வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 1999 முதல் 2000ம் ஆண்டு வரை மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சராகவும், 2003ம் ஆண்டு வரை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க., சார்பில் பெரம்பலூரில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி. அரசில் 2004 - 2007ம் ஆண்டு வரை மத்திய சுற்றுச்சூழல் துறைஅமைச்சராகவும், பின்னர் 2007ம் ஆண்டு மே மாதம் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக 2009 வரை பொறுப்பு வகித்துள்ளார். 2009ம் ஆண்டு நடந்த 15வது நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மிண்டும் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ஜூன் 2009ல் பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து எழுந்த 2ஜி விவகாரத்தில் திமுக தலைவர் கலைஞர் ஆணையை ஏற்று ஜனநாயகத்தை காத்திட அமைச்சர் பதவியை 2010ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி ராஜினாமா செய்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் ஆ. ராசா இளம் வயது மத்திய அமைச்சர்களில் ஒருவராக இருந்தார். கல்லூரி காலங்களில் பல்வேறு சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கு கொண்டுள்ளார். பெரியாரின் திராவிடர் கழகத்தின் கொள்கைகளில் பெரிதும் ஈடுபாடுக் கொண்டிருந்தார். முதன் முதலாக தனது பொது வாழ்க்கையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, பெரம்பலூர் ஒன்றியச் செயலாளர், பின்னர் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். பெரம்பலூர் டாக்டர் அம்பேத்கார் சிந்தனையாளர்கள். பேரவையின் தலைவராகவும், பெரம்பலூர் பகுத்தறிவாளர்கள் பேரவை மற்றும் தமிழ் இலக்கியப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். ஆ.ராசா அதிக புத்தகங்களை விரும்பி படிப்பவர். இவர் ஒரு கவிஞரும் கூட. இவர் எழுதிய தமிழ் கவிதைகளை தொகுத்து 'ஒருசுய சரிதை' என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்திய அரசியலை உலுக்கிய 2ஜி விவகாரத்தில் மக்களுக்கு உண்மையை உரக்க சொல்லும் விதமாக, பத்திரிக்கைகளில் மிகவும் பிரபலமான “2ஜி அவிழும் உண்மைகள்? (தமிழ்) மற்றும் '2ஜி சகா அன்போல்ட்ஸ்' ஆங்கிலபுத்தகங்களை அண்மையில் வெளியிட்டார். இவர் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் நான்காவது முறையாக தி.மு.க., சார்பில் போட்டியிடவுள்ளார்.