திருவையாறில் இளம் கலைஞர்களுக்கான கலைப்போட்டிகள்

கலை பண்பாட்டுத் துறை சார்பில், இளம் கலைஞர்களுக்கான கலைப் போட்டிகள் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

Update: 2024-02-29 00:55 GMT

கலை பண்பாட்டுத் துறை சார்பில், இளம் கலைஞர்களுக்கான கலைப் போட்டிகள் தஞ்சாவூர் மாவட்டம்,  திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,  கலைத் துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட, மாநில அளவிலான கலைப் போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடத்திட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.  

இதன்படி, தஞ்சாவூர் மாவட்ட அளவில் மார்ச்.9 அன்று கிராமிய நடனம் மற்றும் ஓவியப் போட்டியும், மார்ச்.10 அன்று குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம் ஆகிய கலைப் போட்டிகள் திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. போட்டிகள் நடக்க இருக்கும் இரண்டு நாட்களும் காலை 10 மணிக்கு நடைபெறும்.  குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதி இல்லை.  தனிநபராக அதிகபட்சம், 5 நிமிடங்கள் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவர்.    குரலிசை போட்டியிலும், நாதஸ்வரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், பேண்டு வாத்தியம், மாண்டலின் கிதார், சாக்ஸபோன், கிளார்நெட் போன்றவை கருவியிசை போட்டியிலும்,  5 வர்ணங்கள் ராகம் சுரத்துடன் 5 தமிழ்ப் பாடல்கள் இசைக்கும், தரத்தில் உள்ள கலைஞர்கள் பங்குபெறலாம்.    தாளக் கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல், ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள்,  3 வர்ணங்கள் மற்றும் 5 தமிழ் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கு பெறலாம். கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம்,  காளையாட்டம்,  மயிலாட்டம்,  கைச்சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம்,  ஒயிலாட்டம்,  புலியாட்டம்,  தப்பாட்டம்,   (பறையாட்டம்,) மலைமக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும்.   

ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவியத்தாள்கள் வழங்கப்படும்,  அக்ரளிக் வண்ணம் மற்றும் நீர் வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.   நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்படவேண்டும் அதிகபட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள். மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும், இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.  மேலும், கூடுதல் விவரம் வேண்டுவோர் கலை பண்பாட்டுத் துயைின் www.artandculture@gtn.gov,in என்ற இணையதளம் வாயிலாக பெறலாம்.   

கலை பண்பாட்டுத் துறையின் தஞ்சாவூர் மண்டல அலுவலகத்தின் தொலைபேசி எண்.04362-232252 என்ற எண்ணிற்கும்,   திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி தொலைபேசி எண்.04362 261600 -    9487624902 என்று தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாய்ப்பினை     கலைத்திறன் மிக்க      தஞ்சாவூர் மாவட்ட        இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News