மானாமதுரை - ராமநாதபுரம் ரயில் வழித்தடத்தில் மாற்றம்

மானாமதுரை - ராமநாதபுரம் ரயில் சேவை ஜூலை 31 ஆம் தேதி வரை நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-03 15:08 GMT

பைல் படம்

மானாமதுரை - ராமநாதபுரம் ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக, திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டி எண் 16850 திருச்சியில் இருந்து தினமும் காலை 7.05 மணிக்கு புறப்பட்டு குமாரமங்கலம், கீரனூர், வெள்ளனூர், புதுக்கோட்டை, திருமயம், கோட்டையூர், காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், பாம்பன் வழியாக ராமேசுவரத்திற்கு மதியம் 12.25 மணிக்கு சென்றடையும். இந்த நிலையில், மானாமதுரை - ராமநாதபுரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று திருச்சி ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. அதன்படி வரும் 31-ந்தேதி வரை மானாமதுரை - ராமநாதபுரம் ரெயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதையடுத்து அந்த வழியாக செல்லும் திருச்சி - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் மானாமதுரை - ராமநாதபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் மானாமதுரை வரை மட்டுமே இயங்கும். இதேபோல் மறுமார்க்கமாக வண்டி எண் 16850 ராமேசுவரம் - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் மானாமதுரையில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு திருச்சியை வந்தடையும். பாம்பன் பாலம் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே ரெயில் சேவை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது பராமரிப்பு காரணமாக மானாமதுரை - ராமநாதபுரம் இடையே ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News