ஜல்லிக்கட்டு கொண்டாட்டத்தில் மோதல்

மதுரையில் ஜல்லிக்கட்டு கொண்டாட்டத்தில் அதிமுக பெண் கவுன்சிலர் உள்ளிட்ட 3 பேர் மீது தாக்குதல் நடந்தது.

Update: 2024-02-20 15:58 GMT

மதுரையில் ஜல்லிக்கட்டு கொண்டாட்டத்தில் அதிமுக பெண் கவுன்சிலர் உள்ளிட்ட 3 பேர் மீது தாக்குதல் நடந்தது.

 மதுரையில் திமுக, அதிமுக தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், அதிமுக பெண் கவுன்சிலர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். மதுரை மாநகர் அதிமுக பகுதி செயலாளர் சித்தன். அவரது மனைவி நாகஜோதி, 20-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். சித்தனுக்கும், அப்பகுதி திமுக வட்டச் செயலாளர் தனசேகரனுக்கும் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், திண்டுக்கல்லில் நடந்த ஜல்லிக்கட்டில் காளையை அவிழ்த்தபோது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்தப் போட்டியில் தனசேகரன் தரப்பு காளை வெற்றி பெற்றது. அதை ஊருக்குள் அழைத்து வந்து, ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாகச் சென்றனர்.

அப்போது, விளாங்குடி மந்தை பகுதியில் நின்றிருந்த சித்தன் தரப்பினருக்கும், தனசேகரன் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இதில் கவுன்சிலர் நாகஜோதி, அவரது மகன் சுந்தரபாண்டியன் மற்றும் தனசேகரன் தரப்பில் ஒருவர் காயமடைந்தனர்.

இதுகுறித்து கூடல்புதூர் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்தனர். அதிமுகவைச் சேர்ந்த சித்தன் மற்றும் 13 பேர் மீதும், திமுக தரப்பில் தனசேகரன் மற்றும் 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சித்தன், அவரது உறவினர் நவீன், திமுக வட்ட செயலாளர் தனசேகரனின் ஆதரவாளர் சரவணன், சத்யசீலன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையில், அதிமுக பகுதி செயலாளர் சித்தன் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா தலைமையில் கட்சியினர் காவல் நிலையத்தில் திரண்டனர். அவர்களிடம் போலீஸார் பேசி, கலைந்து போகச் செய்தனர்.

Tags:    

Similar News