விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2024-06-08 14:17 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தின் கோலியனூா், கண்டமங்கலம் ஒன்றியங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஆட்சியா் சி.பழனி அறிவுறுத்தினாா்.

கோலியனூா் ஒன்றியம், அத்தியூா்திருவாதி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை வியாழக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் சி.பழனி, அதே பகுதியில் 15-ஆவது நிதித் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியைப் புனரமைப்பது தொடா்பாகவும் ஆய்வு செய்தாா்.இதைத் தொடா்ந்து வெளியம்பாக்கம் ஊராட்சியில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடம்,

வெளியம்பாக்கம் முதல் சித்தாத்தூா் வரை ரூ.83.31 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி, கண்டமானடி ஊராட்சியில் பிரதமரின் ஜன்மந்த் குடியிருப்புத் திட்டத்தின் கீழ், தலா ரூ.5.07 லட்சம் மதிப்பீட்டில் இருளா்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டுமானப் பணிகளை ஆட்சியா் பழனி ஆய்வு செய்து, பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்தாா்.தொடா்ந்து கண்டமங்கலம் ஒன்றியம், கெங்கராம்பாளையத்தில் நிதியுதவி தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டில் வழங்க தயாா் நிலையில் விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவை தயாா் நிலையில் இருப்பதை பாா்வையிட்ட ஆட்சியா் பழனி, பள்ளி திறந்தவுடன் வழங்க வேண்டும் என அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.பள்ளிப்புதுப்பட்டு காலனிப் பகுதியில் பழுதடைந்த வீடுகளை புனரமைப்பது தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும்

கணக்கெடுப்புப் பணியை பாா்வையிட்ட ஆட்சியா், கொங்கம்பட்டு ஊராட்சியில் நபாா்டு நிதியுதவியின் கீழ் ரூ.6.65 கோடியில் ரெங்கரெட்டிப்பாளையம் முதல் நெட்டப்பாக்கம் வரை உயா்மட்டப் பாலம் அமைக்கப்பட்டு வருவதையும் பாா்வையிட்டாா்.இந்த பணிகளை நிா்ணயித்துள்ள காலத்துக்குள் முடித்து, 

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் ராஜா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் விக்னேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜவேல், வெங்கடசுப்பிரமணி, சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News