சேலத்தில் மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி பலி

சேலத்தில் மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2024-07-03 15:02 GMT

பைல் படம்

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 45), கட்டட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். தர்மலிங்கம் நேற்று காலை கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள ஒருவரின் பழைய வீட்டை சீரமைக்கும் பணியில் சக ஊழியர்களுடன் ஈடுபட்டார். அவர் கீழே நின்று கொண்டு ஈர கயிற்றை சாரம் அமைப்பதற்காக மேலே தூக்கி வீசினார். அப்போது அந்த வழியாக சென்ற மின்சார கம்பி மீது கயிறு பட்டது. இதையடுத்து தர்மலிங்கம் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை உடனே மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தனர். இதில் வரும் வழியிலேயே தர்மலிங்கம் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News