நெல்லையில் தசரா விழா கோலாகலம்

நெல்லையில் தசரா விழா கோலாகலமாக நடைபெற்றது. அம்மன் திருவீதியுலா ஊர்வலத்தில் இளைஞர்கள் உற்சாக நடனமாடினர்.

Update: 2023-10-25 04:09 GMT

திருவீதி உலா ஊர்வலத்தில் கோலாட்டம் ஆடிய சிறுமியர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா நெல்லை மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லை மாநகர் பகுதிகளில் அமைந்துள்ள அம்மன் ஆலயங்களில் தசரா திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் நடைபெறும் தசரா திருவிழாவின் போது மின்னொளியில் அலங்காரம் செய்யப்பட்ட சப்பரங்களில் அம்பாள் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். அதன்படி நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள பிட்டாபுரத்தி அம்மன், வாகையடி அம்மன், உச்சினிமாகாளியம்மன், மாரியம்மன், அறம் வளர்த்த நாயகி அம்மன், திரிபுரசுந்தரி அம்மன் உள்ளிட்ட 36 அம்மன் ஆலயங்களிலும் இன்றைய தினம் தசரா திருவிழா கோலாகலமாக நடத்தப்பட்டது தொடர்ந்து ஒவ்வொரு கோவிலிலும் உள்ள அம்பாளும் சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நெல்லையப்பர் கோவில் முன்பு நடைபெற்ற சக்தி தரிசன நிகழ்ச்சியில் 36 திருக்கோவில்களை சேர்ந்த அம்பாள் சப்பரமும் ஒரு சேர வரிசையாக அணிவகுத்து நிறுத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து நடைபெற்ற மகா தீபாரதனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் .ஒவ்வொரு திருக்கோவிலிலும் ஏற்பாடு செய்யப்பட்ட சப்பரத்தின் முன்பு பெண்கள் கோலாட்டம் ஆடியும் தப்பாட்டம் நையாண்டி மேளம்,டோல் மேளம் உள்ளிட்டவைகள் அடித்து ஆட்டம் பாட்டம் என இளைஞர்கள் ஊர்வலமாக வந்தனர்.நெல்லை நகர் பகுதியில் நடைபெற்ற சக்தி தரிசன நிகழ்ச்சியை ஒட்டி நெல்லை மாநகர துணை ஆணையாளர் சரவணகுமார் தலைமையில் நூற்றுகணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Tags:    

Similar News