சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

சேலத்தில் தமிழ்நாடு ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Update: 2024-02-13 06:20 GMT

ஆர்ப்பாட்டம் 

தமிழ்நாடு ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்கம் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இயக்கத்தின் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வினாயகம், சின்ராஜ், சரவணன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் சேலம் மாவட்டத்தில் கனிம வளங்களை சட்டவிதிகள் மீறி எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,

பனமரத்துப்பட்டி ஒண்டிக்கடை கோம்பை காடு பகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் தனியார் கல் குவாரிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும். கல் குவாரிகளால் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள், நீர்நிலைகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் வாடிய மரக்கிளைகளை கைகளில் ஏந்தியவாறு நூதன முறையில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

Tags:    

Similar News