தாரமங்கலம் : சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி
Update: 2023-11-28 03:27 GMT
சம்பத்குமார்
தாரமங்கலம் அருகே உள்ள பெரிய சோரகை கிராமம் பூமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கதிரி. இவருடைய மகன் சம்பத்குமார் (19). இவர் ஓமலூர் அருகே தனியார் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை தனது மொபட்டில் தாரமங்கலம் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பைப்பூர் அண்ணாநகர் பகுதியில் இவரது மோட்டார் சைக்கிள் சென்ற போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் நிலை தடுமாறி வண்டியுடன் சம்பத்குமார் கீழே விழுந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே விழுந்து கிடந்த அவர் மீது பின்னால் வந்த கல்லூரி பஸ் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சம்பத்குமாரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சம்பத்குமாரின் தந்தை கதிரி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.