தவெக நிர்வாகிகள் நியமனத்தில் அதிருப்தி:மகளிரணி நிர்வாகி புகார்

விஜய் மக்கள் இயக்கத்தில் பாடுபட்டவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தில் இடமில்லை என, குமாரபாளையம் நகர விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி நிர்வாகி புகார் கூறியுள்ளார்.

Update: 2024-03-21 10:44 GMT

புகார் மனு அளித்த நிர்வாகி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர விஜய் மக்கள் இயக்கத்தின் நகர மகளிர் அணி தலைவராக உள்ளவர் பிரேமலதா, 43. மாவட்ட செயலராக சில மாதங்கள் முன்பு நியமிக்கப்பட்டார் என தெரிகிறது.  இவர் நடிகரும், தமிழக வெற்றிக்  கழகத்தின் தலைவருமான விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது பற்றி இவர் விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நான் பி.எஸ்.சி. எம்.பி.ஏ. பட்டதாரி. யூ.எஸ்.ஏ. பல்கலை சார்பில் கவுரவ டாக்டர் பட்டமும் வாங்கி உள்ளேன்.  விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இலவச மருத்துவ முகாம்கள், அரசு பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டிக்கொடுத்தது, 

விஜய் படங்களுக்கு முதல் காட்சிகளுக்கு டிக்கெட் எடுத்து பொதுமக்களுக்கு வழங்குதல், ஏழை, எளியவர்களுக்கு தீபாவளி, பொங்கல் மற்றும் உள்ளூர் பண்டிகை, களங்களில் புதிய ஆடைகள் வழங்குதல், முதியோர் இல்லங்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள் வழங்குதல், மருத்துவ உதவி, கல்வி உதவி, அனாதை சடலங்களை போலீசார் அனுமதியுடன் சொந்த செலவில் அடக்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட செயல்கள் செய்து வருகிறேன். பல்வேறு நலத்திட்டங்களை நான் செய்து வந்த  நிலையில், 

விஜய் மக்கள் இயக்கத்தைச் சார்ந்த சிலர்கள் அதனை தடுத்து வந்தனர். இது போல் மாநிலம் முழுதும் உள்ள  மாவட்டம் மற்றும் நகர நிர்வாகிகள் செய்யும் தவறுகளால் உண்மையான  தொண்டர்கள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்தவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் தொடங்கியதும் அவற்றில் பதவிகள் வழங்காமல், மாவட்டம் மற்றும் நகர நிர்வாகிகள் தங்கள் உறவினர்களுக்கும் தங்கள் வேண்டப்பட்டவர்களுக்குமே பரிந்துரை செய்து பதவிகளைப் பெற்றுத் தருகின்றனர்.

இதனால் உண்மையாக உழைத்தவர்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை. இது போன்ற செயல்கள்  தமிழக வெற்றிக் கழகத்தில்  நடந்து விடாமல், ஆரம்பத்திலேயே கவனத்தில் கொண்டு களைய வேண்டும். இவ்வாறு அவர்  தமிழக வெற்றிக்  கழகம் தலைவர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News