மஞ்சப்பை விருது பெற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்

திருச்சியில் 2023 - 24ம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருது பெற, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரதீப்குமாா் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-05 11:55 GMT

 திருச்சியில் 2023 - 24ம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருது பெற, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரதீப்குமாா் தெரிவித்துள்ளார்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மீண்டும் மஞ்சப்பை ”பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் 2023-2024, நிதியாண்டிற்காக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் சட்டப் பேரவையில் மஞ்சப்பை விருதுகள் அறிவிக்கப்பட்டது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்தி, மாற்று பொருட்களான மஞ்சப்பை, பாக்குமட்டை, காகிதங்களால் ஆன கவா்கள் ஆகிய சுற்றுசூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்து தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களை தோ்வு செய்து இவ்விருதானது வழங்கப்படும்.

மாநில அளவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்தி பிளாஸ்டிக் இல்லாத வளாகத்தை உருவாக்கும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படும். மேலும், முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் மூன்றாவது பரிசாக 3 லட்சம் வழங்கப்படும். இவ்வறிவிப்பினை தொடா்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமானது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிா்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்தும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு மஞ்சப்பை விருதினை வழங்க உள்ளது. இந்த விருதிற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் ஆவணங்களில் தனிநபா் துறை தலைவா் கையொப்பமிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகள் மற்றும் மென்நகல்கள் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், 25, சிட்கோ தொழிற்பேட்டை, துவாக்குடி, திருச்சி-15 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும் என்றும் விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் மே 5ஆம் தேதியாகும் என ஆட்சியா் தகவல் தெரிவித்துள்ளாா்.

Tags:    

Similar News