அண்ணாமலை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

அதிமுக - பாஜக கூட்டணி கலைய அண்ணாமலை தான் காரணம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Update: 2024-06-06 15:22 GMT

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தோல்வி தொடர்பான ஆலோசணைக் கூட்டம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

இதில் கோவை தொகுதி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள்,பகுதி செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்திற்கு பின்னர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை,பொள்ளாச்சி, நீலகிரி,திருப்பூர் தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தேர்தல் தொடர்பாக தெளிவான அறிக்கையினை எடப்பாடி பழனிச்சாமி கொடுத்து உள்ளார் எனவும் 1980,1989,1996, 2004,2019 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு தோல்விகளை பெற்று இருந்தாலும் அதன் பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இயக்கம் அதிமுக எனவும் கோவை மாவட்ட மக்கள் ஒரு தீர்ப்பை கொடுத்து இருக்கின்றனர். வாக்களித்த மக்களை எப்போதும் மதிக்க கூடிய கட்சி அதிமுக என்ற அவர் எப்போதும் போல அதிமுக மக்கள் பணியாற்றும் எனவும் கோவைக்கு அதிமுக போல திட்டங்களை தந்த கட்சி வேறு எதுவும் இல்லை என்றார்.

அதிமுக பல தேர்தல்களை சந்தித்த கட்சி எடுத்தேன்-கவிழ்த்தேன் என பேச முடியாது எனவும் 2019ல் 19.39 சதவீத வாக்குகளை பெற்ற நிலையில் இப்போது 20.46 சதவீதம் வாங்கி உள்ளதாகவும் கடந்த தேர்தலை விட கூடுதலாக வாக்குகளை வாங்கியுள்ளதாகவும் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்து இருக்கின்றது என தெரிவித்தார். தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து மக்களின் வாக்குகளை பெற முயற்சிப்போம் என்றவர் அண்ணாமலை குறித்து பேச கூடாது என இருந்தோம். ஆனால் அவர் நிறைய பேசி உள்ளார்.

அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிகம் பேசியதாக சொல்லி இருக்கிறார் ஆனால் அதிகமாக பேசியதே அண்ணாமலை தான் என்றும் இவர் தலைவராக வந்த பின்பு தான் அண்ணா,அம்மா, எடப்பாடியாரை கூட்டணியில் இருந்து கொண்டே அவர்களை பற்றி தவறாக பேசினார் எனவும் இந்த கூட்டணி கலைய அண்ணாமலைதான் காரணம் என்றார். கூட்டணி இருந்திருந்தால் 30 முதல் 35 சீட் கிடைத்தது இருக்கும் எனவும் எந்த முடிவு எடுத்தாலும் அதிமுக தெளிவாக இருக்கும் என்றார். 

Tags:    

Similar News