நிலக்கடலை காயவைக்கும் பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்

தஞ்சாவூர் அருகே சாகுபடி செய்யப் பட்ட நிலக்கடலைகளை காய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-11-13 01:34 GMT

நிலக்கடலை காயவைக்கும் பணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். கோடையிலும் நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. மேலும் கடலை, மக்காச்சோளம், கரும்பு, எள், பயறு, போன்றவையும் சாகுபடி செய்யப்படுகிறது. முக்கியமாக மானாவாரி நிலங்களில் அதிகளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, திருக்கானூர்பட்டி, திருமலை சமுத்திரம், செங்கிப்பட்டி, வல்லம் உட்பட பல பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் கோடையில் நிலக்கடலையும், எள்ளும் சாகுபடி செய்யப்படுகிறது. உலக அளவில் எண்ணை வித்துக்கள் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. நிலக்கடலை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு தேவையான எண்ணெய் வித்து பயிர்களை சாகுபடி செய்வது அத்தியாவசியமாகிறது. மணிலா அல்லது நிலக்கடலை என அழைக்கப்படும் பயிரானது மிக முக்கியமான எண்ணெய் வித்து பயிராகும். இது பயறு வகை குடும்பத்தை சார்ந்து இருந்தாலும் மற்ற வகை பயறுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. இது கண்டு பூ பூக்கும். காணாமல் காய் காய்க்கும் அதிசய பயிராகும். சமையல் எண்ணெய் உற்பத்தியிலும் கடலை முக்கிய இடத்தை வகிக்கிறது. சரியான பட்டமான கார்த்திகை, மார்கழி பட்டத்தில் நிலக்கடலை விதைப்பது சிறந்தது ஆகும். அந்த வகையில் தஞ்சை அருகே அய்யாசாமிபட்டியில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்த நிலக்கடலையை சாலையில் காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் கடலை காய வைப்பதில் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர். கடந்த 2 நாட்களாக வெயில் நன்கு அடிப்பதால் கடலை காயவைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
Tags:    

Similar News