சாலியமங்கலம் பகுதியில் உலர் களம் அமைத்து தர விவசாயிகள் கோரிக்கை

சாலியமங்கலம் பகுதியில் நெல்லை காய வைக்க உலர் களம் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2024-06-13 12:05 GMT

உலர் களம் அமைக்க கோரிக்கை 

தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலம் பகுதியில் உலர் களம் வசதி இல்லாததால் நெல்லை சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே சாலியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி யில் 2,500 ஏக்கரில் குறுவை, சம்பா மற்றும் கோடை சாகுபடி என முப்போகம் நெல்சாகுபடி நடைபெறும். தற்போது இப்பகுதியில் கோடை பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது.

Advertisement

அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர்த்த அரசு கொள்முதல் நிலையத்தில் போதுமான இடவசதியோ அல்லது உலர்களம் வசதியோ இல்லாததால் விவசாயிகள் நெல்லை நெடுஞ்சாலையில் கொட்டி காய வைத்து வருகின்றனர். நெடுஞ்சாலையில் நெல்லை உலர்த்துவதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக ஏற்படுவதோடு,

தொழிலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலியமங்கலம் பகுதியில் நெல்லை உலர்த்த உலர்களம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சாலியமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில்,

சாலியமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை காயவைக்க உலர்களம் இல்லை. இதே போல் அரசு கொள்முதல் நிலையத்திலும் நெல்லை காயவைக்க இடவசதி இல்லை. நெல்லை நன்கு காயவைத்து எடுத்து சென்றால் தான் அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முடியும் என்பதால் மழை காலங்களில் நெல்லை காயவைக்க முடியாமல் பெரிதும் சிரமப்படுகிறோம்.

இதன் காரணமாக அறுவடை செய்த நெல்லை நெடுஞ்சாலைகளில் கொட்டி காயவைக்க வேண்டிய நிலை உள்ளது.

அப்போது வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தாலும் வேறு வழியில்லை. நெல்லை உலர்த்த உலர் களம் அமைத்து கொடுத்தால் உதவியாக இருக்கும் என்று கூறினர்.

Tags:    

Similar News