மர்மமான முறையில் ஆடுகள் இறப்பு: போலீசார் விசாரணை
விருதுநகரில் மர்மமான முறையில் உயிரிழந்த 14 ஆடுகள் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை.;
மர்மான முறையில் இறந்த ஆடுகள்
விருதுநகர் அருகே ரோசல் பட்டி பகுதியில் வசித்து வருபவர் முனீஸ்வரி. இவர் கூலித்தொழில் செய்து வரும் நிலையில் வீட்டில் சுமார் 15-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.அதே பகுதியைச் சார்ந்த பரமசிவம் என்பவரும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார்.
இவர்கள் இருவரும் இன்று காலை வழக்கம் போல் ஆட்டை மேய்ச்சலுக்காக வெளியே விட்டுள்ளனர்.வழக்கம்போல் ஆடுகள் காட்டுப் பகுதிக்கு மேய சென்ற ஆடுகள் மாலை நேரத்தில் திடீரென மயக்கம் அடையத் தொடங்கியதால் அதிர்ச்சடைந்த இருவரும் இது குறித்து காவல்துறைக்கும் கால்நடை மருத்துவருக்கும் தகவல் தெரிவித்தனர்.
கால்நடை மருத்துவர்கள் மயங்கிய நிலையில் இருந்த ஆடுகளை மீட்டு சிகிச்சை அளித்தனர். இதில் முனீஸ்வரி என்பவரின் 9 ஆடுகளும் பரமசிவம் என்பவரின் நான்கு ஆடுகளும்உயிரிழந்தது.மேலும் ஐந்து ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஆடுகள் எதனால் உயிரிழந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடுகளுக்கு யாரேனும் விஷம் வைத்துக் கொன்றார்களா அல்லது ஆடு வேறு ஏதும் காரணத்தில் உயிரிழந்ததா என்பது குறித்து ஊரக காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.