புதிய வழித்தடத்தில் அரசுபேருந்து!
பொறையார்- சீர்காழி கிழக்கு கடற்கரைச்சாலையில் புதிய பேருந்து வழித்தடத்தில் அரசு பேருந்து சேவை துவக்கப்பட்டது.
Update: 2024-02-02 10:54 GMT
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் இருந்து தரங்கம்பாடி, மாணிக்கபங்கு, சின்னங்குடி, தர்மகுளம் வழியாக கிழக்கு கடற்கரைச் சாலையில் சீர்காழி வரை புதிய பேருந்து வழித்தடத்தில் அரசு பேருந்து சேவை இன்று துவக்கப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் பொதுப்போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்து வந்த நிலையில், கடலோர கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று புதிய பேருந்து வழித்தடம் துவங்கப்பட்டுள்ளது. பொறையாறு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற துவக்க விழாவில் புதிய பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பின்னர் தானே பேருந்தை ஓட்டிச் சென்றார். தரங்கம்பாடி, மாணிக்கபங்கு, குட்டியாண்டியூர், சின்னங்குடி வாணகிரி,தருமகுளம் உள்ளிட்ட கிராமங்களில் புதிய பேருந்துக்கு அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து ,மாலை, அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் இனிப்புகள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் 20 கிலோ மீட்டர் தூரம் வரை பேருந்து ஓட்டிச்சென்றார். அனைத்து பேருந்து நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கியும் விட்டனர். புதிய பேருந்திற்கு ஒவ்வொரு கிராமத்திலும் மலர் தூவியும் மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.