மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மானிய கடனுதவி தகவல்கள்

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெறும் சிறப்பு முகாம்களில் மானிய கடனுதவி திட்டங்கள் குறித்து விவரங்களை அறிந்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Update: 2023-12-27 09:58 GMT
மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் 

தமிழ்நாடு அரசு அனைத்து வகை மக்கள் நல திட்டங்களின் பயன்களை பொது மக்களுக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு சேர்க்கும் வகையில் “மக்களுடன் முதல்வர்“ என்ற திட்டத்தினை  தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 18 ஆம் தேதி துவக்கி வைத்தார். அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 20 ஆம் தேதி முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகர்ப்புற ஊராட்சிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களுக்கு பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை விண்ணப்பிக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அலுவலர்கள் இத்திட்டத்தை பெருவாரியாக விளம்பரப்படுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

முகாம்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும், அரசு மானிய கடனுதவி திட்டங்களான அண்ணல் அம்பேத்கர் வணிக முன்னோடி திட்டம், வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத்திட்டம், பிரதம மந்திரியின் உணவுப்பொருள் பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மற்றும் தொழில் பதிவு சான்று ஆகிய பலன்களை உடனடியாக பெற்றுக்கொள்ள, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுய தொழில் புரிய விழைவோர், தொழில் முனைவோர், தொழில் நிறுவனத்தார் மற்றும் தொழில் ஆர்வலர்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் தங்களது வசிப்பிடங்களுக்கு மிக அருகில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களுக்கு வருகை புரியும் பட்சத்தில் அவர்களுக்கு தொழில் பதிவு சான்று விண்ணப்பம் பதிவேற்றுதல், வங்கி மூலம் கடன் ஒப்பளிப்பு பெறுதல், மானியத் தொகை விடுவித்தல் உள்ளிட்ட பலன்களை பெற்றுக் கொள்ளலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் வரும் 30 ஆம் தேதி வரை அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வருமாறும் மற்றும் மானிய கடனுதவி திட்டங்கள் சம்பந்தமாக கூடுதல் தகவல்கள் பெறுவதற்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர். என்ற முகவரியில் நேரிலோ அல்லது 89255 - 34036 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News