இந்து சமய அறநிலையத்துறை அலட்சியம்: திரும்பிச் சென்ற வெளிநாட்டவர்கள்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் நெரிசலில் சிக்கிய வெளிநாட்டினர் தரிசனம் செய்யாமல் திரும்பி சென்றனர்.

Update: 2024-01-02 08:00 GMT

நெரிசல் 

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், பல்வேறு திவ்ய தேசங்களும் பரிகார தலங்களும் அமைந்துள்ளது. அவ்வகையில் பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலம் என போற்றபடும் ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் மாநகரின் மையத்தில் அமைந்துள்ளது. இத் திருக்கோயிலை காண வெளிநாட்டு மற்றும் வெளி மாநில உள்ளூர் பக்தர்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்து சாமி தரிசனம் மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் இத்திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக திருப்பணி துவங்கி உள்ளதால் ராஜகோபுரம் வழி அடைக்கப்பட்டு, பக்கவாட்டில் உள்ள சிறிய வழியாக தற்போது தரிசனத்திற்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்த வழியில் பக்தர்கள் மட்டும் அனுமதிக்க ஏற்பாடு செய்யாமல், வாகனங்கள் உள்ளே செல்லவும் இந்து சமய அறநிலைத்துறை அனுமதி அளித்துள்ளதால், பண்டிகை காலங்களில் அப்பகுதியில் பெரும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.

புத்தாண்டை ஒட்டி பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் மற்றும் வெளி மாநில, வெளிநாட்டவர்கள் என பலர் இந்த நெரிசலில் சிக்கி தவித்தனர். இந்து சமய அறநிலையத்துறை இதற்கான முன்னேற்பாடுகள் எந்த விதத்திலும் எடுக்கவில்லை எனவும் , இதனால் பல வெளிநாட்டவர்கள் திருக்கோவிலுக்கு செல்லாமலே திரும்பி செல்லும் அவல நிலையும் ஏற்பட்டது. வாகன நெரிசலும் பொதுமக்களும் என அப்பகுதி முழுவதுமே பல மணி நேரம் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டும் இருந்தனர். இது நிகழ்ந்த நேரத்திலாவது காவல்துறையை இந்து சமய அறநிலை துறை அலுவலர்கள் அழைத்து ஒழுங்குப்படுத்தி இருக்கலாம், ஆனால் இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியம் பக்தர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களையும் முகம் சுளிக்க வைத்தது.

Tags:    

Similar News