போரூர் ஏரியில் ஆகாய தாமரை உடனே அகற்ற வேண்டுகோள்

போரூர் ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-03-11 15:56 GMT

ஆகாய தாமரை

சென்னைக்கு மிக அருகில், மாநகராட்சி எல்லையில் போரூர் ஏரி உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு, போரூர் ஏரியை துார் வாரப்பட்டு, 46 மில்லியன் கன அடி கொள்ளளவில் இருந்து 70 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் வகையில் ஆழப்படுத்தப்பட்டது. மேலும் 2017ம் ஆண்டு இந்த ஏரிக்கரையில், 1.85 கோடி ரூபாய் செலவில், தற்காலிக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம், தினசரி 40 லட்சம் லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு 'மிக்ஜாம்' புயல் தாக்கத்தால் பெய்த கன மழையில், போரூர் ஏரி நிரம்பி வழிந்தது. தற்போது இந்த ஏரி முழுதும் ஆகாய தாமரை படர்ந்துள்ளது. இந்த செடிகளால் ஏரியில் உள்ள தண்ணீர் விரைவில் உறிஞ்சப்படும். அத்துடன் நீர் பரப்பிற்கு ஆக்சிஜன் சூரிய ஒளி செல்வது தடைபட்டு, நீர்வாழ் உயிரினங்கள், நன்மை தரும் செடிகள் அழியும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஆகாய தாமரையின் இலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் 'டெங்கு' உள்ளிட்ட கொசுக்கள் அதிக அளவில் இனப்பெருக்கம் ஆகின்றன. இதனால் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. எனவே ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News