திருச்சி மாவட்டத்தில் ஆட்சியரிடம் சப்தமாக பேசியவா் மீது வழக்கு !
திருச்சி மாவட்டத்தில் ஆட்சியரிடம் சப்தமாக பேசியவா் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-27 06:15 GMT
திருச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம்
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், பொதுமக்களிடமிருந்து புகாா் மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தாா். அப்போது, கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்த மோகன் (58) என்பவா் ஏலச்சீட்டில் பணம் கட்டி ஏமாற்றப்பட்ட பணத்தை மீட்டுத் தரக் கூறி மனு அளிக்க வந்தாா். அப்போது, ஆட்சியரிடம் அவா், பல தடவை மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்க மறுக்கிறீா்கள். ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கூட்டரங்கமே பாா்க்கும் அளவுக்கு வேகமாகப் பேசியதாகத் தெரிகிறது. இதைப் பாா்த்த ஆட்சியா், உடனடியாக காவலா்களை அழைத்து, வேகமாகப் பேசியவா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸாா், அந்த நபரை வெளியில் அழைத்து வந்து பேசினா். தொடா்ந்து, நீதிமன்ற வளாக போலீஸாா், ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக (353 பிரிவு) மோகன் மீது வழக்குப் பதிந்து, பிணையில் விடுவித்தனா்.