கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கு
கலைஞர் நூற்றாண்டு விழா
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி வருகிற 16, 17 ஆம் தேதிகளில் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூகத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற உள்ளது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சிகளை நடத்துவதெற்கென தமிழக அரசால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒன்றான சட்டமன்ற நாயகர்- கலைஞர்' என்ற குழு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் முன்னாள் பேரவைத் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகள்,கல்லூரிகளில் ஒரு மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகள் என்ற வகையில் “நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது" என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கினை நடத்துவதென குழு தீர்மானித்துள்ளது. அந்த அடிப்படையில் இதற்கென நான்கு துணைக் குழுக்களும் பேரவைத் தலைவரால் அமைக்கப்பட்டுள்ளது. பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி. ஞானசேகரன் ஆகியோர் உள்ளடங்கிய துணைக் குழுவானது, சட்டமன்றப் பேரவை உயர் அலுவலர்களுடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லூரிகள்,பள்ளிகளில் இக்கருத்தரங்குகளை வருகிற16 வியாழக்கிழமை மற்றும் 17 வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் நடத்துவதென முடிவெடுத்துள்ளது. பேரவைத் தலைவர் மற்றும் சட்டமன்றப் பேரவைச் செயலாளர் ஆகியோரும் இக்கருத்தரங்குகளில் கலந்து கொள்ளவுள்ளார்கள். இக்கருத்தரங்குகள் வருகிற 16 ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 9-00 மணியளவில் திருவண்ணாமலை, அருணை பொறியியல் கல்லூரியிலும் பிற்பகல் 3-00 மணியளவில் திருவண்ணாமலை, எஸ்.கே.பி. வனிதா மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் நடைபெறும். அதே போன்று 17 ம் தேதி வெள்ளிக்கிழமை அன்றும் இக்கருத்தரங்குகள் நடைபெறும். இந்நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.