காஞ்சிபுரம்: 1031 விபத்துகள், 282 பேர் பலி, 1264 பேர் காயம்

தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக, ஜனவரியில் கடைபிடிக்கும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஓராண்டில் மட்டும், 1,031 விபத்துகளில் 282 பேர் உயிரிழந்தனர். 1,264 பேர் பல்வேறு விபத்துக்களில் காயமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

Update: 2024-01-22 03:47 GMT

பைல் படம் 

 தமிழகத்தில் உள்ள கிராம சாலைகள், ஒன்றிய, மாவட்ட, தேசிய நெடுஞ்சாலைகள் போதிய பராமரிப்பு இன்றியும், குண்டும் குழியுமாக இருப்பதால், ஏராளமான விபத்துகள் நடந்தபடியே உள்ளன. இதனால், ஆண், பெண், குழந்தைகள் என பல தரப்பினரும் காயமடைவதோடு இறக்கவும் நேரிடுகிறது. இவற்றை குறைக்க, சாலை பாதுகாப்பும், விழிப்புணர்வும் முக்கிய பணியாக பார்க்கப்படுகிறது.

ஜனவரி 15 முதல், பிப். 14 வரை சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. சாலை பாதுகாப்பிற்கு, தமிழக அரசு, 2023- - 24ம் ஆண்டில் மட்டும் 135.8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இருப்பினும் சாலை விபத்துக்களும், இறப்பு ஏற்படுவதும் தொடர்ந்தபடியே உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், நெடுஞ்சாலை துறை சாலைகளும், தேசிய நெடுஞ்சாலை சாலைகளும் படுமோசமாக இருப்பதால், அன்றாடம் பல விபத்துக்கள் நடத்தபடியே உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டடத்தில், 2023ல், ஜனவரி முதல், டிசம்பர் வரையிலான ஒரு ஆண்டில் மட்டும், 1,031 சாலை விபத்துக்கள் நடந்துள்ளதாக போலீசில் பதிவாகியுள்ளது. இதில், 274 விபத்துக்களில் 282 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல, 757 விபத்துக்களில், 1,264 பேர் காயமடைந்துள்ளனர். சராசரியாக, ஒரு நாளைக்கு மூன்று விபத்துக்கள் நடப்பதால், அனைத்து தரப்பினரும் பாதிக்கின்றனர். சாலை பாதுகாப்பு சம்பந்தமாக, மாதந்தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது.

Tags:    

Similar News