கடத்தப்பட்ட குழந்தை இரண்டு மணி நேரத்தில் மீட்பு

சமயபுரத்தில் குழந்தையை கடத்தப்பட்ட நிலையில் இரண்டு மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.

Update: 2024-03-30 06:52 GMT

 சமயபுரத்தில் குழந்தையை கடத்தப்பட்ட நிலையில் இரண்டு மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நெடுவாக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோபு.இவரது மனைவி கௌதமி. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒன்னே முக்கால் வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தையின் அம்மா கௌதமி மற்றும் பெரியம்மா முத்துலட்சுமி ஆகியோர் மன்னார்குடியில் இருந்து சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளனர். பின்னர் மொட்டை அடித்து விட்டு குளிப்பதற்காக குழந்தையின் அம்மா கௌதமி தனது அக்கா முத்துலட்சுமியிடம் குழந்தையை பாதுகாப்பாக பார்த்துக்க சொல்லிவிட்டு குளிக்கச் சென்றுள்ளார்.

பின்னர் குளித்துவிட்டு வந்து பார்க்கும்போது குழந்தை காணவில்லை. இது குறித்து தனது அக்கா முத்துலட்சுமியிடம் கேட்டபோது அவரும் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இது குறித்து அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் குழந்தை குறித்து விசாரித்த போது அந்த குழந்தை பழக்கடை அருகில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அப்போது குழந்தையை ஒரு பெண் வந்து கூட்டிச் சென்றதாகவும் அந்தப் பழக்கடைக்காரர் நீங்கள் யார் என்று அந்த பெண்ணிடம் கேட்கும் போது எனது பேத்தி தான் என்று கூறி குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். பின்னர் கோயில் வளாகத்தில் குழந்தையை தேடிய போது எங்கும் கிடைக்கவில்லை.

இது குறித்து குழந்தையின் தாயார் கௌதமி சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் சமயபுரம் போலீசார் அனைவரும் குழந்தையை தேடிச் சென்றனர். அப்போது அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது ஒரு பெண் அந்த குழந்தையை தூக்கிச் சென்றது தெரியவந்தது.போலீசாரின் தேடுதல் வேட்டையில் கடத்தப்பட்ட குழந்தை இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவில் அருகே கடத்தப்பட்ட பெண்னுடன் இருந்தது தெரியவந்தது.

பின்னர் அந்த குழந்தையை சமயபுரம் காவல் ஆய்வாளர் மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் குழந்தையை கடத்திச் சென்ற பெண் தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் தாலுகா,அய்யம்பேட்டை,துளசியாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த 50 வயதான நீலாவதி என தெரியவந்தது. கடத்தப்பட்ட குழந்தையை அவரது அம்மா கௌதமியிடம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் நீலாவதி மீது வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் அவரை கைது செய்தனர்.குழந்தை கடத்தப்பட்ட இரண்டு மணி நேரத்தில் மீட்டெடுத்த சமயபுரம் போலீசாரை குழந்தையின் தாயும்,அப்பகுதி மக்களும் வெகுவாக பாராட்டினர்.

Tags:    

Similar News