தனியார் வேலை வாய்ப்பு முகாமில் ஏராளமானோர் பங்கேற்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர்.
Update: 2024-01-25 07:35 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். அது சமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே, 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் அன்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் கலந்து கொண்டு தங்களுக்கு உரிய வேலைவாய்ப்பினை பெற்றிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அவ்வகையில் இன்று காலை 10 மணி அளவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக இணை இயக்குனர் அருணகிரி தலைமையில் அவ்வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் துவங்கியது. இதில் 30-க்கும் மேற்பட்ட பிரபல தனியா தொழிற்சாலை நிறுவன அதிகாரிகள் தங்களது தொழிற்சாலையில் உள்ள பணி வாய்ப்புகள் ஊதியம் மற்றும் பிற சலுகைகள் குறித்து வரிசையாக எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து வேலை நாடுவோர் அனைவரும் தங்களது சுய விவர குறிப்புக்களை அங்கு அளிக்கபட்ட விண்ணப்பத்தில் விண்ணப்பித்து பதிவு செய்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். 1000 க்கும் மேற்பட்ட ஆண்கள் , பெண்கள் என பலர் முகாமில் கலந்து தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர்.