மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
தாம்பரம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வரபிரசாதம், 60. இவரின் மனைவி விசுவாசம், 50. இருவரும், கட்டட வேலை செய்து வருகின்றனர். காலையில் வேலைக்கு சென்ற விசுவாசம், இரவு தாமதமாக வீட்டிற்கு வந்ததால், கணவன் - மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட வரபிரசாதம், கடந்த 2022, அக்., 19ம் தேதி நள்ளிரவில், வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டி, தலையணையை முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்தார். மகள் ஆனந்தி, 28, கொடுத்த புகாரின்படி விசாரித்த சிட்லபாக்கம் போலீசார், வரபிரசாதத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், அரசு தரப்பு வழக்கறிஞர் சிசிரேகா ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, குற்றவாளி வரபிரசாதத்திற்க்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை கட்ட தவறினால், மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை என, தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சென்னை புழல் சிறையில் வரபிரசாதம் அடைக்கப்பட்டார்.