வெள்ளி வியாபாரி கொலையில் மேலும் ஒருவர் கைது !
வெள்ளி வியாபாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Update: 2024-03-12 06:54 GMT
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 45), வெள்ளி வியாபாரி. இவர் கடந்த மாதம் 2-ந்தேதி காலையில் பால் வாங்கிக்கொண்டு அந்த பகுதியில் சாலையில் நடந்து சென்றார். அப்போது வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார் என்ற புகார் எழுந்தது. இது தொடர்பாக நடந்த விசாரணையில் அவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர். இதையடுத்து சங்கரின் தங்கை கணவர் சுரேஷ்பாபு, கூலிப்படை தலைவரும், பிரபல ரவுடியுமான கோழி பாஸ்கர், ஆயுதப்படை போலீசார் உதயகுமார், தி.மு.க. பிரமுகர் ஆரிப் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கோழி பாஸ்கரின் தம்பி ராஜா தலைமறைவாக இருந்தார். அவரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.