பொங்கல் விழா கோலாகலம்
குமாரபாளையத்தில் சந்து பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது.
By : King 24x7 Website
Update: 2024-01-01 17:18 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மார்கழி, தை மாதங்களில் அந்தந்த பகுதி மக்கள் சுகாதாரமாக வாழவும், மாணவ, மாணவியர் நன்கு படிக்கவும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறவும், தொழில் வளம் சிறக்கவும் சந்து பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி குமாரபாளையம் நகர் பகுதியில் நேற்று பெரும்பாலான இடங்களில் சந்து பொங்கல் விழா களை கட்டியது. பம்பை, மேளங்கள் முழங்க காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பக்தர்கள் பலரும் அம்மன் வேடமிட்டு வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பொங்கல் படையலிட்டு, பொதுமக்களுக்கு பொங்கல் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அந்தந்த பகுதி மக்கள் ஒன்றாக ஒரே இடத்தில் உணவு உண்டனர். இதனால் சகோதரத்துவம், நட்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுதல் ஆகிய பழக்க வழக்கங்கள் வளர ஏதுவாக உள்ளது. பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இது போன்ற விழாக்கள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள கோவில்கள் பராமரிக்கப்பட காரணமாக அமைகிறது. :