வனப்பகுதியில் தீ ஏற்படுத்தினால் தண்டனை: வனத்துறையினர் எச்சரிக்கை

வனப்பகுதியில் தீ ஏற்படுத்துவர்களுக்கு வனப்பாதுகாப்பு சட்டத்தில் சிறை தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-16 13:57 GMT

எச்சரிக்கை விடுத்த வனத்துறையினர்

வனப்பகுதியில் தீ ஏற்படுத்துவர்களுக்கு வனப்பாதுகாப்பு சட்டத்தில் சிறை தண்டனை : ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வனத்துறையினர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டமானது 1492 ச.கி.மீ பரப்பளவுடன் 120 காப்புக் காடுகள், 7 வனச்சரகங்களாகவும் 85 வனக்காவல் சுற்றுகளாகவும் பிரிக்கப்பட்டு 300 க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள் வனப்பகுதிகளை பாதுகாத்து வருகின்றனர்.

இந்த வனப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான தேக்கு, ஈட்டி, சந்தனம், ஜாலாரி, உசில், ஆச்சான், பொரசு மற்றும் மூங்கில் மரங்கள், அரியவகை தாவரங்கள், புலிகள், காட்டு யானைகள், காட்டு எருமைகள், புள்ளி மான்கள், கடமான்கள், கரடிகள், சிறுத்தைகள், காட்டுப் பூனைகள், மயில்கள் போன்ற வன உயிரினங்களும், சாம்பல் நிற அணில்கள் எகிப்திய கழுகுகள் போன்ற அரியவகை விலங்குகளும் காணப்படுகின்றன.

நடப்பாண்டில் போதிய மழையின்மை காரணமாக வனப்பகுதிக்குள் வறட்சி நிலவி வருகிறது. அதிக அளவில் சருகுகள் உள்ளதால் வனப்பகுதிக்குள் எளிதில் தீ நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தீ நிகழ்வுகளை கட்டுப்படுத்த வனப்பணியாளர்கள் தீ தடுப்பு கோடுகள் வெட்டுதல் மற்றும் தீ தடுப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

பொதுமக்கள் ஏதேனும் காரணங்களுக்காகவோ, அத்துமீறியோ வனப்பகுதிக்குள் நுழையக்கூடாது. கால்நடை மேய்ச்சலுக்காக செல்லும் நபர்கள் வனப்பகுதிக்குள் எளிதில் ஏற்படுத்தும் பொருட்களையோ, தீப்பட்டிகள், பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்லக்கூடாது என வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை தளி ஆகிய பகுதிகளில் கிராமம் கிராமமாக ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

எச்சரிக்கையும் மீறி வனப்பகுதியில் தீ ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது வன பாதுகாப்பு சட்டத்தின்படி 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களும் இயற்கை ஆர்வாளர்களும் வனத்துறையோடு இணைந்து வனவளத்தை காப்பதற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் அப்போது கேட்டு கொண்டனர்.

Tags:    

Similar News