புதுமண தம்பதிகள் கண்தானம், ரத்த தானத்தை வலியுறுத்தி மாட்டுவண்டியில் விழிப்புணர்வு
" வேளாண்மை இல்லையேல் மேலாண்மை ஏதுமில்லை" என வலியுறுத்தி விழிப்புணர்வு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதிதாக திருமணம் செய்து கொண்ட மணமக்கள், கண் தானம் மற்றும் ரத்தம் தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன், விஜயலட்சுமி தம்பதியினரின் மகன் N.விக்னேஷ் - க்கும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சரவணன், லதா நாகேஸ்வரி தம்பதியினரின் மகள் ஐஸ்வர்யா மீனாட்சி ஆகிய இருவருக்கும் இன்று காலை திருமணம் முடிந்தது.
திருமணத்தை முடித்த கையோடு ராசிபுரம் பகுதியில் உள்ள மணமகனின் வீட்டுக்கு, பொதுமக்களிடம் இரத்ததானம் மற்றும் கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணமக்கள் இருவரும் மாட்டு வண்டியில் இருபுறமும் பதாகைகள் கட்டி பயணித்தனர். மணமகன் N.விக்னேஷ் மாட்டு வண்டியை ஓட்ட மணமகள் அமர்ந்து சென்றார். வழக்கமாக திருமணமான மணமக்கள், சொகுசு கார் மற்றும் சாரட் வண்டிகளில் பயணிப்பது வழக்கம்.
அவ்வாறு இல்லாமல் நாட்டு மாடுகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் கண்தானம் செய்வோம் ரத்ததானம் செய்வோம் என்ற பாதாகைகளுடன், " வேளாண்மை இல்லையேல் மேலாண்மை ஏதுமில்லை" என்பதை வலியுறுத்தி, மணமுடித்த கையோடு மாட்டு வண்டியில் ஏறி, இராசிபுரம் To சேலம் செல்லும் முக்கிய சாலையில் மணமக்கள் இருவரும் மாட்டு வண்டியை ஒட்டி பயணித்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.