பெரியார் நகர் சந்திப்பில் பேருந்து நிழற்குடை அமைக்க கோரிக்கை
பெரியார் நகர் சந்திப்பு நிறுத்தத்தில், பேருந்து நிழற்குடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரியார் நகர் சந்திப்பு நிறுத்தத்தில், பேருந்து நிழற்குடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மறைமலை நகர் -- கலிவந்தப்பட்டு மார்க்கத்தில், மாநகரப் பேருந்து எம்118 இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில், மறைமலை நகருக்கு அருகில் உள்ள கூடலுார், கடம்பூர், ஆகிய கிராமங்களைச் சேர்ந்தோர், மறைமலை நகர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைக்கு சென்று வருகின்றனர். அதேபோல், மறைமலை நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ -- மாணவியரும், இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர். பெரியார் நகர் சந்திப்பு நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், பயணியர், வெயிலிலும், மழையிலும் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால், பெண்கள், மாணவ -- மாணவியர், முதியோர் மிகவும் சிரமப்படுகின்றனர். பெண் பயணியர் கூறியதாவது: தொழிற்சாலையில் நீண்ட நேரம் நின்று வேலை செய்த பின், இங்கு பேருந்துக்காகவும் நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, பெரியார் நகர் சந்திப்பு நிறுத்தத்தில், பேருந்து நிழற்குடை அமைத்து, இருக்கை வசதி செய்ய, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்