மதுரை ரயில் நிலையம் பகுதியில் சாலை மறியல் போராட்டம்

மத்திய பாஜக அரசை கண்டித்து மதுரை ரயில் நிலையம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

Update: 2024-02-16 09:50 GMT

ஒன்றிய மோடி தலைமையிலான பாஜக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு, மருந்து பொருட்கள், வேளாண் இடுபொருள்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கிட வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலையை குறைத்திட வேண்டும். உணவு பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்திடும் ரேஷன் விநியோகத்தை விரிவாக்கி செயல்படுத்த வேண்டும். தேசிய குறைந்தபட்ச ஊதிய மாதத்திற்கு 26 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020 ரத்து செய்ய வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும், தேசிய பணம் மக்கள் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மின்சார திருத்த மசோதா 2022 திரும்பப் பெற வேண்டும், முன்பணம் செலுத்தும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை கைவிட வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி நாளொன்றிற்கு 600 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். நகர்புறத்திற்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 சட்டங்களை நான்கு தொகுப்பு சட்டங்களாக திருத்தியதை திரும்ப பெற வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை முற்றாக கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேசிய நிதி ஆணையம் ஏற்படுத்தி முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக நலத்திட்டங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்று மதுரை மாநகரில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியூசி, எல்பிஎப், எச்எம்எஸ், ஏஐசிசிடியூ, டிடிஎஸ்எப், டியூசிசி, எம்எல்எப், எல்எல்எப் ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அருகில் இருந்து மதுரை ரயில் நிலைய சந்திப்பு வரை பேரணியாக சென்று மறியல் போராட்டம் எல்பிஎப் மாவட்ட கவுன்சில் செயலாளர் சி. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.

இம் மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்ட குழு உறுப்பினரும் துணை மேருமான தி. நாகராஜன் மற்றும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தைச் சேர்ந்த 500 பெண்கள் உள்ளிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News